வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதி கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, வெள்ளிக்கிழமை ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது.
இந்த ஃபெஞ்சல் புயலானது சனிக்கிழமை மாலை கரையைக் கடக்க தொடங்கிய நிலையில் நள்ளிரவில் 11:30 மணியிலிருந்து 1 மணி வரை மரக்காணம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் 8 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால், பர்கத் நகர், ஜமியத் நகர், இந்திரா நகர், எம்ஜி ரோடு, இப்ராஹிம் கார்டன், ஐயூப் கார்டன், மரைக்காயர் தெரு, பழைய பட்டினப்பாதை போன்ற பல பகுதிகளில் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
மேலும் ஜமியத் நகர், சமரச நகர், தௌலத் நகர், அபிஷேக் நகர் போன்ற பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் சுமார் நள்ளிரவில் 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டு, கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மஹாலில் தங்க வைத்தனர்.
வெகு நேரம் கழித்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், மீதமுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். வெள்ள பாதிப்பால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் முற்றிலும் பழுதடைந்தன.
மேலும், பல பகுதிகளில் ராட்சசன் மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஷாதி மஹாலில் பேரிடர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
புயலின் காரணமாக நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்பொழுது வரை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வினியோகம் நாளை காலை 11 மணி முதல் படிப்படியாக வழங்கப்படும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.